தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும் சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி (80) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவரான சபரீசனின் தந்தை வேதமூர்த்தி, கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் காலமானார்.
வேதமூர்த்தியின் உடல் அஞ்சலிக்காக, கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்நிலையில், வேதமூர்த்தியின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையே ஓசூர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை புறப்படுகிறார்.
காலை 11 மணியளவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, 1 மணி அளவில் எல்காட் நிறுவனம் சார்பில் புதிய ஐடி தொழில் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு, இரண்டு மணி அளவில் மதிய உணவு முடித்துவிட்டு, உடனடியாக குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தில் புதிய தொழிற்சாலை துவக்கி வைக்கிறார்.
அதன்பின் மீண்டும் ஓசூர் வந்து ஓசூரில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு மாலை 6 மணிக்குள் வந்து சேர்கிறார். சபரீசன் ஆஸ்திரியா நாட்டில் இருந்து இன்று நள்ளிரவு சென்னை திரும்புகிறார்.
நாளை கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.