புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில், இரவு நடைபெற்ற முத்து திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மணக்குள விநாயகரை தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 65ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா கடந்த 28ஆம் தேதி துவங்கியது. அதையொட்டி, அன்று அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, உற்சவ சாந்தி 108 சங்காபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, தினமும் காலை, மாலைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது. பிரமோற்சவ விழாவில் ஒரு பகுதியாக இன்று இரவு முத்து விமான திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கோவிலில் உட்புறபாடு நடைபெற்றது.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட முத்து விமானத்தில் வைக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மணக்குள விநாயகரை தரிசனம் செய்தனர்.