ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்ள பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “ராதாகிருஷ்ணன் பதவியேற்பு சிறப்பாக சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது.
இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலாச்சி. எங்கள் ஊரில் இதேபோல் இத்திட்டத்தில் மனுக்களை பெற்று அதை ஆற்றில் வீசினார்கள். பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்துப்போய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக ஆட்சிதான். ஆப்பரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர் தான். அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது கனிமொழி தான். குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து பேசுகிறார்கள். இவர்களிடம் உறுதித் தன்மை என்ன இருக்கிறது.
குஜராத் கலவரத்தை திமுக கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசினார்கள். ஆனால், அதே கட்சியால் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து போராடினார்கள். அப்போது கூட்டணியில் இருந்ததால் ஆதரித்தீர்கள், இப்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்த்தீர்கள். உங்களுக்கு ஒரு நிலைப்பாடு இல்லை. எல்லா வழியிலும் நட்போடு இருப்பது நீங்கள் தான்” என்றார்.
அதிமுக கூட்டணியில் இருந்த பிரிந்தவர்கள் விஜயுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “கூட்டத்தை வைத்து கட்சியை ஆரம்பிக்கவில்லை. நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான். ஊழல், லஞ்சமா? உண்மை, நேர்மையா?
பிள்ளைகள் வாழ்வதற்கு வீட்டை கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் பிள்ளைகள் வாழ நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆண்ட அதிமுக, திமுக இரு கட்சிகளும் பாஜக காங்கிரஸோடு கூட்டணி வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். அவர்கள் 60% கொள்ளை அடித்தால், இவர்கள் 40% கொள்ளை அடிப்பார்கள் இதுதான் நடக்கப்போகிறது.
அதிகாரங்களை எதிர்த்து போரிட்டு சண்டை போட்டதால் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது இதற்கெல்லாம் பயப்படக்கூடாது. எங்கள் தாத்தாவின் பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டாம். எங்களுடைய வரலாறு உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்” என்றார்.
மேலும், திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்றும் ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது என்றும் நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியலாக பார்க்கிறோம் என்றும் கூறினார்.