முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
ஷார்ஜாவில் நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணியும் மோதின. இதில் டாஸ் வென்றி பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான சஹிப்ஷதா ஃபர்ஹான் 16 ரன்களிலும், சயிம் அயூப் 11 ரன்களிலும் வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினாலும், ஃபஹர் ஜமான் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் (44 பந்துகள்) எடுத்தார். அதேபோல கடைசிவரையில் களமிறங்கிய மொஹமது நவாஸ் 37 (27 பந்துகள்) எடுத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
19ஆவது ஓவரில் நவாஸ் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். அதேபோல், கடைசி ஓவரில் ஃபஹர் ஜமான் 5 பவுண்டரிகளை விளாசினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 171 ரன்கள் எடுத்தது.
பின்னர், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமீரகம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுபுறம் அணியின் வெற்றிக்காக போராடிய அலிஷன் ஷரஃபு 68 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய துருவ் பரஷர் 18 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் அமீரகம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அப்ரார் அஹமது 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே அவரது சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது. இதனால், பாகிஸ்தான் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதவுள்ளன. இரண்டு அணிகளுமே லீக் போட்டியில் தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. அதே சமயம், லீக் போட்டி ஒன்றில், ஆஃப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.