காஞ்சிபுரத்தில் ரூ.450கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியதாக வி.கே.சசிகலா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பத்மாவதி சர்க்கரை ஆலையை ஹிதேஷ் ஷிவ்கன் பட்டேல் அவரது சகோதரர் தினேஷ் பட்டேல் ஆகியோர் நிர்வகித்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து சசிகலா ரூ.450கோடிக்கு இந்த சர்க்கரை ஆலையை வாங்கி பினாமி பெயரில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கி கடன் மோசடியிலும் சிக்கியது. சர்க்கரை ஆலை வங்கியில் ரூ.120கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், ஆலையின் அங்கி கணக்குகள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தனர்.
அதில் ” பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை ரொக்கமாக ரூ.450 கோடி வரை கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒபந்தம் போடப்படிருப்பதும் அதில் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கையெழுத்து போட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின் சசிகலா சர்க்கரை ஆலையை வாங்கியுள்ளார். இது தொடர்பாக சசிகலா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சசிகலா வீட்டில் 2019ம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கியது தொடர்பாக சசிகலாவிடம் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிப்பது சட்டவிரோத நடவடிக்கை என்பதால் சசிகலா ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கி இருப்பதும் அது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சசிகலா மீது கைது நடவடிக்கை பாய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்” தகவல் வெளியாகியுள்ளது.