நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர்.
இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மணிகண்டன், கண்ணா ரவி, அர்ஜுன் அசோக், மாளவிகா மனோஜ், ரித்தீஷ், ஜெனிலியா, பேரரசு என பலர் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய ரவி மோகன், என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த தருணத்தில் நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் இயக்குனர் ஆகி விட்டேன். நான் இயக்குனர் ஆகினால் யோகி வைத்ததால் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதற்கான புரோமோவும் எடுத்துவிட்டேன். இன்று என்னுடைய இரண்டு படங்களின் பூஜையும் ஒரே நேரத்தில் நடப்பதில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கார்த்தியும் நானும் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது தாய்லாந்தில் சாலையில் அவ்வப்போது பேசிக்கொண்டே நடந்து போவோம். அப்போது எங்களுடைய மீசை, தாடி, உடைகளை பார்த்து இருவரும் அண்ணன் தம்பிகளா என்று பலர் கேட்டிருக்கிறார்கள். அந்த ப்ரோ கோட்-ம் அன்பும் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சினிமா கோடிக்கணக்கான மக்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சி. திரையரங்கில், யாரோ ஒருவரின் வசனமும் நடிப்பும் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும், கண்ணீர் சிந்தவும் செய்கிறது. பலரின் உழைப்பால் தான் ஒரு படம் உருவாகிறது. அந்தப் படங்களில் மக்களால் விரும்பப்பட்டவை வெற்றியை அடைகின்றன. பல நல்ல படங்கள் மக்களால் காலங்கள் கடந்தும் இன்னமும் கொண்டாடப்படுகின்றன என கூறினார்.

தொடர்ந்து, ஒரு சாதாரண நபரை கூட, உலகம் கொண்டாடும் ஒரு பிரபல நட்சத்திரமாக மாற்றும் சக்தி சினிமாவுக்கே உண்டு. அதில் நானும் ஒருவன் தான். எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்தது என் ரசிகர்கள். அவர்கள் எனக்குக் கொடுத்த பரிசு – இந்த சினிமா. நடிப்பதைக் கடந்து, சினிமாவில் நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவது நிறைய இருக்கிறது. அது, நான் நீண்ட நாட்களாகக் கனவு காண்பதும்கூட. அதில் ஒன்று தான் ரவி மோகன் ஸ்டுடியோஸ் – என் சொந்த தயாரிப்பு நிறுவனம். என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படியாக, என் மனசுக்கு பிடித்த இரண்டு முக்கிய விஷயங்களை வைத்திருக்கிறேன். ஒன்று – இயக்குநர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நான் நடிக்கும் ப்ரோ கோட் படம். இன்னொன்று – நம்ம யோகிபாபுவை வைத்து, நான் முதன்முறையாக இயக்கவிருக்கும் மற்றொரு படம். முக்கியமாக உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு. ரவி மோகன் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டது, என்னுடைய படங்களை தயாரிப்பதற்காக மட்டுமல்ல. பலரின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கத்தான். அதில், முதல் முறையாக திரைப்படம் இயக்கவிருக்கும் புதிய இயக்குநர்கள், இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, முன்தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்முடைய கனவை திரையில் கொண்டு வரக்கூடிய மிகவும் பொறுப்பு மிகுந்த விஷயம். ரவிமோகன் சரி எனக்கு அவ்வளவாக தெரியாது. நான் சார் என்று தான் கூப்பிடுவேன். சினிமா துறையில் அவர் என்னைவிட சீனியர். பராசக்தி படத்தின் போது தான் அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நல்ல மனிதர் நம் அவருடைய படங்களை பார்த்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒரு எண்ணம் இருக்கும். அவர் அப்படியேதான் இருக்கிறார் என பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மட்டுமில்லாமல் நேற்று எனக்கு போன் செய்து, நாளைக்கு நிச்சயம் வந்துருங்க ப்ரோ என்று நினைவுபடுத்தினார். இங்கு வந்து பார்த்த பிறகு அவருக்குள் இருக்கும் அத்தனை கனவுகளும் ஒரு நடிகராக தயாரிப்பாளராக பொறுப்பேற்று என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து இருக்கிறார் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.