அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களிடம் ஆபாசமான வார்த்தைகளால் போதையில், பேரூராட்சி திமுக துணைத் தலைவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் துணை சுகாதார நிலைய கட்டடங்கள், செவிலியர் குடியிருப்பு மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டட திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தார். அவர்களுடன் திமுக தேனி தொகுதி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., கே.எஸ்.சரவணகுமார், மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, தேவதானப்பட்டி பேரூராட்சி திமுக துணை சேர்மன் கு.நிபந்தன், இந்த விழாவில் தனக்கு எந்தவித அழைப்பும் கொடுக்கவில்லை மற்றும் மேடையில் இருக்கை ஒதுக்கவில்லை என ஆபாசமான வார்த்தைகளால், விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் ஆபாசமான வார்த்தைகளால் பேசினார்.
மேலும், மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்த போதிலும், திமுக துணைச் சேர்மன் கேட்பதாக இல்லை. தொடர்ந்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தது அங்கிருந்த அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கட்சியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக தேனி மாவட்டத்தில் அமைச்சர் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிக்களுக்கே உரிய மரியாதை மற்றும் அழைப்பிதழ் வழங்காமல் விழா நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டை வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் மேகமலையில் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு இருக்கை வழங்காமல் நிற்கவைக்கப்பட்ட நிலையில், பேரூராட்சி துணைத் தலைவர் மது போதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.