ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ் கனிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கில், ஒரு வாரத்தில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி உயர்நீதிமன்றத்தில் செய்த பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவாஸ் கனி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக சிபிஐக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவி, மகனுக்கு, 19 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், 2024ஆம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 40 கோடியே 62 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பு எனக் குறிப்பிட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வருமானத்துக்கு அதிகமாக 23 கோடியே 58 லட்சம் ரூபாய் சொத்து குவித்துள்ளார். இது வருமானத்தை விட 288 சதவீதம் அதிகமாகு. இது சம்பந்தமாக புகார் அளித்தும் சிபிஐ இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை என்பதால், புகார் மீது விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவ மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு சிபிஐ ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது.