நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பிரமாண்ட மாநில மாநாடு நடைபெற்றது.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். பீகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாடினார்.
இந்த நிலையில் நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவின் தலைவர் பவன்கேரா, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி தங்கபாலு,திருநாவுக்கரசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் வாக்கு திருட்டு உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதாவது வக்காளர் பட்டியல் திட்டுத்த சிறப்பு முகாம் என்ற பெயரில் உண்மையான வாக்காளர்களின் பெயர்களை நீக்கி விட்டு போலியான வாக்காளர்களை ஒரே முகவில் நூற்றுக்கணக்கில் பதித்து ஒரு வாக்காளருக்கு பல வாக்குச்சாவடிகளில் பெயர் சேர்க்கும் நூதன முறை கேட்டை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம், ஆதிச்சநல்லூர், கீழடியில் தொல்லியல் ஆய்வில் கிடைத்த தமிழன் செவ்விய நாகரீகத்தின் வரலாற்று பெருமையை உலகறிய செய்ய மறுக்கும் பாஜக அரசை வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.