புதுச்சேரியின் புகழ்பெற்ற ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் சித்ரா சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அளவில் தரமான மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனையில் முக்கிய இடம் பிடித்துள்ளது புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை ஆகும்.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதன் வளாகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் ஆண்டுதோறும் 250 இளங்கலை மருத்துவர்களும், 200 முதுகலை மருத்துவர்களும் தேர்வாகின்றனர்.
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் சித்ரா சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மருத்துவராக மட்டுமின்றி விஞ்ஞானியாகவும் உள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர். சிறந்த நோயியல் நிபுணர். நரம்பியல் நோயியல் துறையில் சர்வதேச அளவில் பங்களித்துள்ளார்.
கடந்த 2019ல் பெங்களூருவில் உள்ள இந்திய அளவியல் அகாடமி வெளியிட்ட 100 புகழ்பெற்ற இந்தியாவில் அறிவியலில் பெண்கள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. புதிய தலைவராக அவர் பொறுப்பேற்றதை தொடர்ந்து, ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகியை சந்தித்து பேசினார். ஜிப்மர் நிறுவனத்தின் வரலாறு, முக்கிய மைல்கற்கள், தற்போதைய செயல்முறை அமைப்புகள், எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விளக்கினர்.
இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி கூறுகையில், ‘ஜிப்மரின் புதிய தலைவராக சித்ரா சர்க்கார் நியமனம் ஒரு முக்கிய மைல்கல். அவரது தலைமையத்துவம், அறிவியல் சிறப்பும் ஜிப்மரை நாட்டின் முன்னணி மருத்துவ கல்வி ஆராய்ச்சியில் சிறந்த சுகாதார சேவை மையமாக வலுப்படுத்தும். அவரது தலைமையில் ஜிப்மர் சுகாதார துறையில் புதிய உயரங்களை எட்டும்’ என்றார்.