மிலாடி நபியை முன்னிட்டு மதுபான கடைகள் மற்றும் சாராய கடைகள் மூடுவதற்கு புதுச்சேரி கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் புதுச்சேரியில் 2025ஆம் ஆண்டிற்கான அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் 17 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு (ஜனவரி 1), பொங்கல் திருநாள் (ஜனவரி 14), திருவள்ளுவா் தினம் (ஜனவரி 15), ரம்ஜான் (மார்ச் 31), தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14), புனித வெள்ளி (ஏப்ரல் 18), மே தினம், பக்ரித் பண்டிகை (ஜூன் 7), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), டிஜுரே டிரான்ஸ்பர் தினம் (ஆகஸ்ட் 16), விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 27), மிலாடி நபி (செப்டம்பர் 5), சரஸ்வதி பூஜை (அக்டோபர் 1), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), தீபாவளி (அக்டோபர் 20), புதுச்சேரி விடுதலை நாள் (நவம்பர் 1), கிறிஸ்துமஸ் பண்டிகை (டிசம்பர் 25) ஆகிய 17 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிலாடி நபியை முன்னிட்டு வருகின்ற 5ஆம் தேதி புதுச்சேரியில் அனைத்து மதுபான கடைகள், சாராயகடைகளை மூடுவதற்கு புதுச்சேரி கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று, திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு போக்குவரத்து தெரிவித்துள்ளது.