ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரானப் போட்டியில், இந்திய அணி வரலாற்று வெற்றிபெற்றதோடு, பல சாதனைகளையும் படைத்துள்ளது.
17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் செப்டம்பர் 09 தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
தொடரின் 2ஆவது போட்டியில் பலம் பொருந்திய இந்திய அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான அலிஷன் ஷரஃபு 22 ரன்களும், முஹமது வாசிம் 19 ரன்களும் எடுத்தனர். அதற்கு அடுத்தபடியாக ராகுல் சோப்ரா 3 ரன்கள் எடுத்தார். நான்கு வீரர்கள் 2 ரன்களும், மூன்று வீரர்கள் 1 ரன்னும் எடுத்தனர். ஒருவர் டக் அவுட் ஆனார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் (3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். சுப்மன் கில் 9 பந்துகளில் (2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) 20 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 2 பந்துகளில் 7 ரன்களும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர்.
நேற்றைய போட்டியின் சாதனைகள்:
ஐக்கிய அரபு அமீரகம் எடுத்த 57 ரன்கள் தான், இந்திய அணிக்கு எதிராக, ஒரு அணியால் அடிக்கப்பட்ட குறைந்த ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக, 2023ஆம் ஆண்டு 235 ரன்கள் என்ற இந்திய அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, 66 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோர் ஆக இருந்தது.
மேலும், இந்த போட்டியில் 57 ரன்கள் எடுத்ததன் மூலம், அமீரகம் அணி டி20 போட்டிகள் தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவுசெய்தது. இதற்கு முன்னதாக, ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட 66 ரன்களே, அமீரகம் அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.
ஒட்டுமொத்த ஆசியக்கோப்பை டி20 போட்டியில் அடிக்கப்பட்ட இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். முன்னதாக, 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹாங்காங் அணி, 38 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இந்திய அணி குறைந்த பந்துகளில் (27 பந்துகள்) இலக்கை எட்டிய போட்டியாக இது அமைந்தது. மேலும், ஆடவர் டி20 போட்டிகளில் 93 பந்துகளை மீதம் வைத்து, இந்திய அணி பெற்ற வெற்றிதான், அதிக பந்துகளை மீதம் வைத்து பெற்ற வெற்றியாக அமைந்தது. இதற்கு முன், 2021 டி20 உலகக்கோப்பையில், ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 81 பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் 7 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே, ஆசியக் கோப்பை போட்டிகளில் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. புவனேஷ்குமார் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 4 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
இந்த போட்டியின் மூலம், டி20 போட்டிகளில் குல்தீப் யாதவ் நான்கு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். புவனேஷ்குமார் ஐந்து முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் குல்தீப் யாதவ் 3 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவது 4ஆவது முறையாக நடந்துள்ளது. யுவேந்திர சாஹல் 2 முறை இந்த சாதனையை படைத்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 6 முறை இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.