தமிழகத்தில் ஓடாமல் இருந்த பல திருத்தேர்களை ஓட வைத்த பெருமை திமுக அரசை சேரும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் புதிதாக கட்டப்பட உள்ள அன்னதான கூடம் அடிக்கல் நாட்டும் விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 900 ஆண்டுகளுக்கு மேல் அருள்தரும் கங்காதேஸ்வரன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடந்தேறியது. இந்த திருக்கோவிலை பொறுத்தவரை இதுவரை 19 கோடி ரூபாய் அளவிற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைக்கு நாள்தோறும் 100 பக்தர்கள் உணவு அருந்த வகையில் அன்னதான கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அந்த வகையில் அன்னதான கூடம் 94 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. மூன்று மாத காலத்தில் பக்தர்களுடைய பயன்பாட்டிற்கு வரும் என கூறிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் தான் பல்வேறு கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடைபெற்றது. தற்போது வரை மூவாயிரத்து நானூற்றி முப்பத்தி இரண்டு திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இன்றைய தினம் மட்டும் 32 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. வருகின்ற தை மாதத்திற்கு உள்ளாக நான்காயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு காணப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
ஓடாமல் இருந்த பல திருக்கோயில் திருத்தேர்கள் திமுக ஆட்சியில் தான் ஓடியது. அந்த பெருமை திமுகவையே சேரும், 18 ஆண்டுகளுக்கு மேலாக போடாமல் இருந்த சிவகங்கை மாவட்டம் கண்டதேவி திருக்கோயில் திருத்தேரை ஓட வைத்த பெருமையும் திமுகவையே சேரும் என்றார்.
அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்துவதில் எந்த தவறும் இல்லை என முருகன் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, இந்தக் கேள்வியை எடப்பாடி பழனிச்சாமிடம் சென்று தான் கேட்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என அன்புமணி கூறுகிறாரே என்ற கேள்விக்கு, தூங்குபவர்களை எழுப்பி விடலாம் தூங்குபவர்கள் போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இது தொடர்பாக பதில் அளிப்பதற்காக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் பதில் அளிப்பார்கள் என்றார்.